என் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் சீரிய தமிழ்ப் பூ !

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

தானத்தை விட உயர்ந்தது தருமமே !

   தானத்தைவிட

 தருமம் செய்தலே புண்ணியம் !

~~~~~~~~~~~~~~~~~~~

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது

தன் தந்தை சூரிய தேவனுடன்

பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து

சுவர்க்க பேறு பெற்றது.

 

சூரிய தேவனுக்கோ

மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை.

எவரிடம் கேட்பது.?

எவர் தெளிவாகக் கூறுவார்கள் ?

குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை

 அதிகரித்தது !

 

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,

என்ன தடுமாற்றம் உன் மனதில் ?

கேட்டது ஈசன் !

 

பரம்பொருளே..

பலவிதமான தான தருமங்கள் செய்து

புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன்

கர்ணனை போரில் கொன்றது விதி

என்று ஏற்றுக் கொண்டேன்.

ஆனால்,

எல்லா புண்ணியங்களையும்

கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால்

அவன் இன்னும் மிகப் பெரிய

புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?

இது அநீதி அல்லவா?

 

எனk கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.

சூரியனே...

நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே

உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது !

சொல்கிறேன் கேள்...

தானம் என்பது பிறருக்குத்

தேவையானவற்றை 

அவர் கேட்டோ,

அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த

பின்னோ தருவது. இதுதான் தானம் !

 

புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின்

 கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை.

ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

 

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே 

அறியாமல்

அவர் நிலை அறிந்து கொடுப்பது.

இதுதான் புண்ணியம் தரும் !

பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது 

தருவது தானம்.

அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தருமம்.


கர்ணன்,

தருமங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான்.

ஆனால், மொத்த புண்ணியத்தையும்

கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே 

தவிர தருமமாகப் பெறவில்லை !


எல்லா புண்ணியங்களையும் தானமாகத் 

தாரை வார்த்து

தந்த பிறகு கர்ணனும்

ஒரு சாதாரண மனிதனானான் !

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது.

 புரிந்ததா ?


கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.

புரிந்தது இறைவா !

தானமும், தர்மமும்

பாவமும்

புண்ணியமும்

எல்லாமும் நீயே !

என்பதும் புரிந்தது என்றார்.


கேட்டு கொடுப்பது தானம் !

கேட்காமல் அளிப்பது தர்மம் !

ஓம் நமசிவாய

திருச்சிற்றம்பலம் !

----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


த.அழகேசன்

[alagesandanapal@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப்புனல் வலைப்பூ

{தி.பி.2050: கும்பம் (மாசி) 16}

(28-02-2021)

------------------------------------------------------------------------

சர்.சி.வி.இராமன்.

 

சர். சந்திரசேகர வெங்கட ராமன்  (நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970) பெரும் புகழ் ட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930 –ஆம் ஆண்டு  இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி, ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார் !

 

இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு  “ இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும் !

 

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்கா என்னும் ஊரில் பிறந்தார். அயல் நாட்டுக்குச் செல்லாமல், இந்தியாவிலேயே தன் படிப்பை நிறைவு செய்த  ஒரு அறிஞருக்கு 1930 - ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும் !

 

சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளிப் படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தார !

 

வெங்கட்ராமன் தன் முதுகலைப் பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்புத் தேர்வில் எல்லாப் படங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார் !

 

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார் !

 

பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார் !இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

 

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார் !

 

அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார் !

 

இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் வெப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது !

 

இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார் !


இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது !

 

இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் நைட் ஹுட்எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.


இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான மேட்யூச்சிபதக்கம் வழங்கப்பட்டது. மைசூர் அரசர் ராஜ்சபாபூசன்பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.

 

பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின்பதக்கம் 1941 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.


1957 ஆம் ஆண்டில் அகில உலக லெனின் பரிசுஅளிக்கப்பட்டது !

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஆக்கம் & இடுகை


த. அழகேசன்

[alagesandanapal@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப்புனல் வலைப்பூ

தி.ஆ 2052: கும்பம் (மாசி) 16)

(28-02-2021)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - --- - - - - - - - - - - - - -

 

எளியோரை இகழாதீர் !

 

நான்மணிக்கடிகை !

பாடல் (3) எள்ளற்க என்றும் எளியரென்று !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ! கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியம். இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். 101 பாடல்களைக் கொண்ட இந் நூலிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் (03)

------------------------------------------------------------------------------------------------

எள்ளற்க  என்றும்  எளியரென்று ! என்பெறினும்

கொள்ளற்க  கொள்ளார்கை  மேற்பட  உள்சுடினும்

சீறற்க சிற்றில் பிறந்தாரை ! கூறற்க !

கூறல்ல  வற்றை விரைந்து !

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

------------------------------------------------------------------------------------------------

 

எவரையும் எந்தச் சிறப்பும் இல்லாத எளிய மனிதர் என்று,    தாழ்வாக  எண்ணாதே ! 

 

மதிப்பில் உயர்ந்த பொருளாயினும் பண்பில்லாத      மனிதர்களிடம்  வாங்காதே ! 

 

தவறு   செய்தாலுங்கூட   ஏழை   மக்களிடம்    சினம்      (கோபம்)    கொள்ளாதே ! 

 

உள்ளம் பதை பதைப்பு அடைந்தாலும் கூட தகாத     சொற்களைச்  சொல்லி விடாதே !

 

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-------------------------------------

கொள்ளத் தகாதவருடைய கைகள்;  மேல  = அவர் கை மேலேயும்  உன்கை கீழேயும் ; உள் சுடினும் = ஏழையின் செய்கை உன் மனதை வருத்தினாலும்; சீறற்க = சினந்து பேசாதே ; சிற்றில் பிறந்தாரை =  ஏழைகளை; கூறல்லவற்றை = சொல்லத் தகாத சொற்களை; விரைந்து = பதை பதைப்பு அடைந்து;  கூறற்க  =  சொல்லிவிடாதே !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

அழகேசன் தனபால்,

[alagesandanapal@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்புனல் வலைப்பூ.

[தி.:2052,கும்பம்(மாசி),16]

{28-02-2021}

-------------------------------------------------------------------------------------------------