ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை !!!
சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்
ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி,
தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி
மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகக்
கூறப்படுகிறது.
அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான
மகாபாரத யுத்தம்
ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள்
நடைபெற்று ,
‘‘ஆடி-18’’ அன்று முடிவுக்கு வந்தது.
இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று
யுத்தம் தொடங்கும் நாளான
ஆடி 1-ஆம் தேதி மக்கள்
அனைவரும் வேண்டி அதற்காக
விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு
பூஜை செய்கிறார்கள்.
இந்த பூஜையின்போது
படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு
அதனை பிரசாதமாக படைத்து
வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.
ஆண்டாண்டு காலமாக
அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில்
இந்த மாவட்டங்களில் ஆடி மாதப் பிறப்பன்று
தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு
வருகிறது.
அதன்படி ஆடி ஒன்று தேங்காய் சுடும் பண்டிகை
சிறுவர், சிறுமிகளின் உற்சாகத்துடன்
வீடுகள் தோறும் கொண்டாடப்படுகிறது.
புதிய தேங்காயை எடுத்து
அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும்
அளவுக்கு அதை
தரையில் தேய்ப்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு
தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு
உள்ளே இருந்த
தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும்.
பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக
தேங்காய்க்குள்
பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல்,
எள்,
ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு,
நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட
அழிஞ்சிமர குச்சியில் அந்த
தேங்காயை சொருகுவார்கள்.
பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை
பூசி துளையை மூடுவர்.
அதைத் தொடர்ந்து
வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி,
[
அல்லது புதிய மண் அடுப்பில் நெருப்பு மூட்டி ]
அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி
சுடுவர்.
ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின்
அதை அருகில் உள்ள
பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும்,
பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து,
அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார்,
உறவினர்களுடன்
உண்டு மகிழ்வது வழக்கம்.
சிலர் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்து,
பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள்.
இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும்
அதனுள்ளே இருக்கும்
பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும்.
ருசி பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள்.
==== முக்கியமான குறிப்பு =====
இந்த ஆடி மாத முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையின் போது
வீட்டில் கருவுற்ற பெண்டிர் யாரேனும் இருந்தால் ,
தேங்காய் சுடும் நிகழ்வை அந்த வீட்டில் உள்ளோர் செய்ய மாட்டார்கள்.
-----------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக